அல்லையூர் சி.விஜயன்.கொம்
56. கொடுங்கோன்மை

 
 
 கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
 டல்லவை செய்தொழுகும் வேந்து
.
 
 அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
 
 வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
 கோலொடு நின்றான் இரவு.
 
 ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.
 
 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
 நாடொறும் நாடு கெடும்.
 
 ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
 
 கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
 சூழாது செய்யும் அரசு.

 
 நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.
 
 அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
 செல்வத்தைத் தேய்க்கும் படை.

 
 கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.
 
 மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
 மன்னாவாம் மன்னர்க் கொளி.

 
 நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.
 
 துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
 அளியின்மை வாழும் உயிர்க்கு.
 
 மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.
 
 இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
 மன்னவன் கோற்கீழ்ப் படின்.

 
 வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.
 
 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
 ஒல்லாது வானம் பெயல்.

 
 முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.
 
 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
 காவலன் காவான் எனின்.

 
 ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.