அல்லையூர் சி.விஜயன்.கொம்
57. வெருவந்த செய்யாமை
 
 தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
 ஒத்தாங் கொறுப்பது வேந்து.

 
 நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.
 
 கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
 நீங்காமை வேண்டு பவர்.

 
 குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.
 
 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
 ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

 
 குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.
 
 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
 உறைகடுகி ஒல்லைக் கெடும்.

 
 கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.
 
 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
 பேஎய்கண் டன்ன துடைத்து.

 
 யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.
 
 கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
 நீடின்றி ஆங்கே கெடும்.

 
 கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.
 
 கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
 அடுமுரண் தேய்க்கும் அரம்.

 
 கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.
 
 இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
 சீறிற் சிறுகுந் திரு.

 
 கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.
 
 செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
 வெருவந்து வெய்து கெடும்.
 
 முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.
 
 கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
 தில்லை நிலக்குப் பொறை.

 
 கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும். அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.