அல்லையூர் சி.விஜயன்.கொம்
59. ஒற்றாடல்
 
 
 ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
 தெற்றென்க மன்னவன் கண்.

 
 நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.
 
 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
 வல்லறிதல் வேந்தன் தொழில்.

 
 நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.
 
 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
 கொற்றங் கொளக்கிடந்த தில்.

 
 நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.
 
 வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
 கனைவரையும் ஆராய்வ தொற்று.

 
 ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.
 
 கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
 உகாஅமை வல்லதே ஒற்று.

 
 சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.
 
 துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
 தென்செயினுஞ் சோர்வில தொற்று.

 
 ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.
 
 மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
 ஐயப்பா டில்லதே ஒற்று.
 
 மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.
 
 ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
 ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
 
 ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.
 
 ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
 சொற்றொக்க தேறப் படும்.
 
 ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.
 
 சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்
 புறப்படுத்தான் ஆகும் மறை.
 
 ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.