அல்லையூர் சி.விஜயன்.கொம்
61. மடி இன்மை
 
 
 குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
 மாசூர மாய்ந்து கெடும்.

 
 பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.
 
 மடியை மடியா ஒழுகல் குடியைக்
 குடியாக வேண்டு பவர்.
 
 குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 
 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
 குடிமடியுந் தன்னினு முந்து.
 
 அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.
 
 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
 மாண்ட உஞற்றி லவர்க்கு.
 
 சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.
 
 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
 கெடுநீரார் காமக் கலன்.
 
 காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!
 
 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
 மாண்பயன் எய்தல் அரிது.
 
 தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.
 
 இடிபுரிந் தௌ;ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
 மாண்ட உஞற்றி லவர்.

 
 முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.
 
 மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
 கடிமை புகுத்தி விடும்.

 
 பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.
 
 குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
 மடியாண்மை மாற்றக் கெடும்.

 
 தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.
 
 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
 தாஅய தெல்லாம் ஒருங்கு.

 
 சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.