அல்லையூர் சி.விஜயன்.கொம்
63. இடுக்கண் அழியாமை
 
 
 இடுக்கண் வருங்கால் நகுக அதனை
 அடுத்தூர்வ தஃதொப்ப தில்.

 
 சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.
 
 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
 உள்ளத்தின் உள்ளக் கெடும்.

 
 வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.
 
 இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
 கிடும்பை படாஅ தவர்.

 
 துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.
 
 மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
 இடுக்கண் இடர்ப்பா டுடைத்து.

 
 தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.
 
 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
 இடுக்கண் இடுக்கட் படும்.
 
 துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.
 
 அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
 றோம்புதல் தேற்றா தவர்.
 
 இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?
 
 இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
 கையாறாக் கொள்ளாதா மேல்.

 
 துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.
 
 இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
 துன்ப முறுதல் இலன்.

 
 இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.
 
 இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
 துன்ப முறுதல் இலன்.

 
 இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.
 
 இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
 ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

 
 துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.