அல்லையூர் சி.விஜயன்.கொம்
77. படை மாட்சி
 
 
 உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
 வெறுக்கையுள் எல்லாம் தலை.

 
 எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச்சிறந்த செல்வமாகும்.
 
 உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
 தொல்படைக் கல்லால் அரிது.

 
 போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.
 
 ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
 நாகம் உயிர்ப்பக் கெடும்.

 
 எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.
 
 அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
 வன்க ணதுவே படை.

 
 எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.
 
 கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
 ஆற்ற லதுவே படை.

 
 உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.
 
 மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
 எனநான்கே ஏமம் படைக்கு.
 
 வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.
 
 தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
 போர்தாங்கும் தன்மை அறிந்து.

 
 களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்.
 
 அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
 படைத்தகையால் பாடு பெறும்.

 
 போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்.
 
 சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
 இல்லாயின் வெல்லும் படை.

 
 சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.
 
 நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
 தலைமக்கள் இல்வழி இல்.
 
 உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது.