அல்லையூர் சி.விஜயன்.கொம்
79. நட்பு

 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
 வினைக்கரிய யாவுள காப்பு.
 
 நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.
 
 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
 பின்னீர பேதையார் நட்பு.

 
 அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.
 
 நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
 பண்புடை யாளர் தொடர்பு.

 
 படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.
 
 நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
 மேற்சென் றிடித்தற் பொருட்டு.

 
 நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல் நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.
 
 புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
 நட்பாங் கிழமை தரும்.

 
 இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.
 
 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
 தகநக நட்பது நட்பு.

 
 இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
 
 அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
 அல்லல் உழப்பதாம் நட்பு.

 
 நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.
 
 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
 இடுக்கண் களைவதாம் நட்பு.

 
 அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.
 
 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
 ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
 
 மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.
 
 இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
 புனையினும் புல்லென்னும் நட்பு.
 
 நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஹஹஇவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.