அல்லையூர் சி.விஜயன்.கொம்
85. புல்லறிவாண்மை
 
 
 அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
 இன்மையா வையா துலகு.
 
 அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.
 
 அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
 இல்லை பெறுவான் தவம்.

 
 அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்.
 
 அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
 செறுவார்க்கும் செய்தல் அரிது.

 
 எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.
 
 வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
 உடையம்யாம் என்னும் செருக்கு.

 
 ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.
 
 கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
 வல்லதூஉம் ஐயம் தரும்.
 
 அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.
 
 அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
 குற்றம் மறையா வழி.

 
 நமது குற்றத்தை உணர்ந்து அதை நீக்காமல் உடலை மறைக்க மட்டும் உடை அணிவது மடமையாகும்.
 
 அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
 பெருமிறை தானே தனக்கு.

 
 நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.
 
 ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
 போஒம் அளவுமோர் நோய்.

 
 சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.
 
 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
 கண்டானாம் தான்கண்ட வாறு.
 
 அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.
 
 உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
 தலகையா வைக்கப் படும்.

 
 ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் "பேய்''களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்.