அல்லையூர் சி.விஜயன்.கொம்
89. உட்பகை
 
 
 நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
 இன்னாவாம் இன்னா செயின்.

 
 இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.
 
 வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
 கேள்போல் பகைவர் தொடர்பு.

 
 வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 
 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
 மட்பகையின் மாணத் தெறும்.

 
 உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்.
 
 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
 ஏதம் பலவும் தரும்.

 
 மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.
 
 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
 ஏதம் பலவும் தரும்.

 
 நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.
 
 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
 பொன்றாமை ஒன்றல் அரிது.

 
 ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.
 
 செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
 உட்பகை உற்ற குடி.

 
 செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்.
 
 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
 துட்பகை உற்ற குடி.

 
 அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்.
 
 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
 உட்பகை உள்ளதாங் கேடு.

 
 எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்.
 
 உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
 பாம்போ டுடனுறைந் தற்று.

 
 உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.