அல்லையூர் சி.விஜயன்.கொம்
90. பெரியாரைப் பிழையாமை
 
 
 ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
 போற்றலுள் எல்லாம் தலை.

 
 ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்.
 
 பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
 பேரா இடும்பை தரும்.

 
 பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.
 
 கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்
 ஆற்று பவர்கண் இழுக்கு.
 
 ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்.
 
 கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
 காற்றாதார் இன்னா செயல்.
 
 எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன், சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்றுதான் பொருள்.
 
 யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
 வேந்து செறப்பட் டவர்.

 
 மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது.
 
 எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
 பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
 
 நெருப்புச் சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல் மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது.
 
 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
 தகைமாண்ட தக்கார் செறின்.

 
 பெருஞ்செல்வம் குவித்துக்கொண்டு என்னதான் வகைவகையான வாழ்க்கைச் சுகங்களை அனுபவித்தாலும், தகுதி வாய்ந்த பெரியோரின் கோபத்துக்கு முன்னால் அவையனைத்தும் பயனற்றுப் போகும்.
 
 குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
 நின்றன்னார் மாய்வர் நிலத்து.

 
 மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்.
 
 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
 வேந்தனும் வேந்து கெடும்.

 
 உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.
 
 இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
 சிறந்தமைந்த சீரார் செறின்.

 
 என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.