அல்லையூர் சி.விஜயன்.கொம்
95. மருந்து
 
 
 மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
 வளிமுதலா எண்ணிய மூன்று.

 
 வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
 
 மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
 தற்றது போற்றி உணின்.

 
 உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.
 
 அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
 பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

 
 உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.
 
 அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
 துய்க்க துவரப் பசித்து.

 
 உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
 
 மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
 ஊறுபா டில்லை உயிர்க்கு.

 
 உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.
 
 இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
 கழிபேர் இரையான்கண் நோய்.

 
 அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை.
 
 தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
 நோயள வின்றிப் படும்.
 
 பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.
 
 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
 வாய்நாடி வாய்ப்பச் செயல்.
 
 நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
 
 உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
 கற்றான் கருதிச் செயல்.
 
 நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.
 
 உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
 றப்பானாற் கூற்றே மருந்து.

 
 நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.