அல்லையூர் சி.விஜயன்.கொம்
96. குடிமை
 
 
 
 இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
 செப்பமும் நாணும் ஒருங்கு.

 
 நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.
 
 ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
 இழுக்கார் குடிப்பிறந் தார்.

 
 ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.
 
 நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்
 வகையென்ப வாய்மைக் குடிக்கு.

 
 முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்.
 
 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
 குன்றுவ செய்தல் இலர்.

 
 பலகோடிப் பொருள்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்தச் சிறப்புக் கெடுவதற்கான செயல்களுக்கு இடம் தரமாட்டார்கள்.
 
 வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
 பண்பின் தலைப்பிரிதல் இன்று.

 
 பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.
 
 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
 குலம்பற்றி வாழ்துமென் பார்.
 
 மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.
 
 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
 மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

 
 பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்.
 
 நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
 குலத்தின்கண் ஐயப் படும்.

 
 என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
 
 நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
 குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்.

 
 விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
 
 நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
 வேண்டுக யார்க்கும் பணிவு.

 
 தகாத செயல் புரிந்திட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.