வேர் பிரிந்த
நிலத்தின் வேதனை...



இரவுகளின்...
புதுமையில்-சில
புதிய மலர்களின் வருகை!

கருண்ட வானத்தில்
சில
மின்மினிப் பூச்சிகளின்
;வெளிச்ச விடுதலைப் 
போராட்டம்!

அதற்குள் ஒன்றிரண்டு
ஊர்திகளிலும்...
ஒன்றிரண்டு காற்றின்
விசையிலும்
மாண்டு போயின.

நடைபாதைப் பெருவெளியில்
சில
நலிந்த மனிதர்களின்
மண்டை ஓடுகள் மீது!
சில...
சில் வண்டுகள்
உருட்டித் திரட்டிய
சில பொதிகளுடன் கூடிய
ஒரு பயணம்.

திடீரெனப் பெய்யும்
அழகிய மழை...
ஒதுங்குவதற்கு
கூரையற்ற வீடுகள்.

ஏதோவொரு
அ(சிங்க) மனிதனின்
வேண்டுதலுக்hக
மொட்டையடிக்கப்பட்ட
மரஞ்செடிகள்.

மாரிமழை,கோடைவெயில்
எல்லாவற்றிலும்
நனைந்தே இந்த
வாழ்கைப் பயணம்.

பசி ஒரு புறம்
தூக்கம் மறு புறம்
துயரங்களைக் 
கையில் பிடித்தவாறே
இந்த
சமாதானக் கிழவனின்
நடுங்கிய பயணம்.

புல்லுகளற்ற
நடைபாதைப் பெருவெளியில்
விதைக்கப்பட்ட
மிதிவெடிகள் மீது
எனது பயணம்.

ஈர நிலத்திலிருந்து
பிடுங்கி எறியப்பட்ட
எனது வேர்...

வேற்று நில்தில்
வேர்விடத் துடிக்கும்
போது.

 

 

ஒரு கருண்ட
இரவு
இடுப்பு வலியெடுத்து
பிதுக்கி என்னை 
வெளியில் போட்டது.

இதோ இதுதான்
நான்
விழுந்த நிலம்.



அல்லையூர்,சி.விஐயன்